Monday, September 20, 2010

" The Hindu " தேசிய நாளிதழின் பொறுப்பற்ற செயல் - ஒரு மோசமான முன்னுதாரணம்

" The Hindu " தேசிய நாளிதழின் பொறுப்பற்ற செயல் - ஒரு மோசமான முன்னுதாரணம்


விளம்பரத்திற்காக தங்கள் நிறுவன பொருட்களை ( ஷாம்பூவில் ஆரம்பித்து.......) ஒரு சிறிய பாக்கெட்டில் போட்டு அச்சில் வெளிவரும் பத்திரிக்கைகளின் வாயிலாக அனுப்புவது தமிழ் நாட்டில் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதை எல்லாம் மிஞ்சி விட்டது மிகப் பெரிய தேசிய நாளிதழ் எனக் கூறப்படும் " The Hindu ". இன்று காலையில் திடிரென செய்தித்தாளை படிக்க ஆரம்பித்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. திடிரென யாரோ பேசுவது போன்ற சப்தம் செய்தித் தாளில் இருந்து வருகிறது. செய்தித்தாள் முழுதும் தேடிப் பார்த்தால் " மெட்ரோ பிளஸ் " எனப்படும் அதிகப்படியான பக்கங்களின் கடைசி பக்கத்தில் வந்துள்ள ஒரு கார் விளம்பரத்தில் அது குறித்த விபரங்கள் பேச்சு வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

எளிதாக அதை தனியாக நாளிதழில் இருந்து பிரித்தெடுக்கவும் முடிகிறது. அதன் உள்ளே ஒரு சிறிய பாட்டரியும் , சர்க்கியூட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது வெறும் விளம்பரமே என்பது ஒரு புறமிருக்க தேசிய அளவில் பல மக்கள் வாசிக்கக் கூடிய செய்தித்தாள்கள் சிறிதும் பொறுப்பின்றி இது போன்று விளம்பரங்களில் சர்க்கியூட்டுக்களை இணைத்து வெளியிடலாமா என்ற கேள்வி தான் முதலில் தோன்றுகிறது. இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதென்று பல மேலை நாடுகள் கூறி வரும் வேளையில் இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் தேவையா.

அந்த விளம்பரத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஒலிப்பான்களையும் சோதனை செய்து பார்த்ததா தி ஹிந்து. சிறிய குழந்தை கூட அதை தனியாக எடுத்து விட்டு அதற்குள் எதையும் வைக்கக் கூடிய அளவிலே இருக்கிறதே இது இரு மிகப் பெரிய குறைபாடில்லையா. தவறு செய்பவர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தும் பல அதி நவீன சாதனங்கள் தொழில் நுட்பத்தினால் சுருங்கி வரும் கால கட்டங்களில் ஒரு சர்க்யூட்டை உள்ளே வைக்கும் அளவிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதே " தி ஹிந்து " . யோசிக்க வேண்டாமா???

நம் நாட்டில் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கடுமையாக இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். என்றைக்கு முதன் முதலாக விளம்பரத்திற்காக பொருட்களை பாக்கெட்டில் போட்டு கொடுத்தார்களோ அப்பொழுதே கண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சில வாரப் பத்திரிக்கைகள் பத்திரிக்கையின் விலையை விட பல மடங்கு விலை அதிகமான பொருட்களை பாக்கெட்டில் போட்டு விளம்பரப்படுத்துவதையே தொழிலாக வைத்துள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆனால் ஹிந்து போன்ற ஒரு தேசிய நாளிதழ் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல் என்பதை கூறிக் கொள்வதோடு ஹிந்து நாளிதழை தினமும் வாசிப்பவர் என்ற முறையில் இது போன்ற செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Thursday, February 11, 2010

பிசினஸ் சக்சஸ் குளறுபடிகள்

பிசினஸ் சக்சஸ் குளறுபடிகள்

சாதாரண பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பல கோடிகளை குவிக்கும் கோடீஸ்வரர்கள் வரை அனைவருமே செய்யும் தொழில் என்னவென்று கேட்கப்படும்போது பிசினஸ் என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம். பெரிய ஜாம்பவான்களான டாடா, பிர்லாவில் ஆரம்பித்து வெற்றி சிகரத்தை எட்டிப்பிடித்த பலரையும் தொடர்ந்து கதைகள் வாயிலாகவும், சிறந்த கட்டுரைகள் மூலமும் இளைய சமுதாயம் தெரிந்துகொண்டு வருகிறது. பிசினஸ் தொடங்கும் பலருக்கும் தானும் டாடா, பிர்லா ஆக வேண்டுமென்பதே நினைப்பு. சிறந்த முன்மாதிரிதான்.

ஆனால் இப்படி வெற்றி சிகரத்தை அடைந்தவர்கள் அனைவருமே எத்தனையோ இலட்சத்தில் ஒருவராக இருப்பர். பாசிடிவ் எண்ணம் தேவை என்பதால் சில முன்மாதிரிகளாக வெற்றியடைந்தவர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றனர். இருந்தாலும் பிசினஸ் ஆரம்பிக்கும் முன் பொதுவான சில எதிர்மறை தன்மைகளை தெரிந்து கொண்டால் எதிர்நோக்கவிருக்கும் ஏற்ற இறக்கங்களிருந்து தன்னை பாதுகாத்துகொள்ளும் தெளிவும் இளைய சமுதாயத்திற்கு கிடைக்கும். பிசினஸிற்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு ஆரம்பித்தால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆரம்பிக்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட அடிப்படை காரணிகள் அனைத்து பிசினஸிற்கும் பொருந்தும்.

1.சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் ஆரம்ப கால கட்டங்களில் வேலைக்கு நிறைய ஆட்களை நியமிப்பதை குறைத்து கொண்டு தான் வேலை செய்து வர்த்தகம் பெருக வேண்டும் என்பது தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

2.செய்யப்போகும் புதிய தொழிலின் மீது அளவு கடந்த ஆர்வமும் அக்கறையும் இருப்பது நல்லது.

3.உற்பத்தி செய்யக்கூடிய பொருளோ அல்லது சேவையோ மக்களின் உண்மை தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தால் மிகவும் நல்லது.

4.தெளிவான குறிக்கோள் , பொறுமை, பாசிடிவ் மனப்பான்மை மூன்றும் மிக அவசியமான தொழிலை வளம்பெறச் செய்யும் காரணிகள்.

5.தோல்விகள் நம்மை தோற்கடிக்க முடியாது என்ற எண்ணமும் அதே நேரத்தில் தோல்விகளின் மூலம் கற்றுக கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தாலே 50 சதவிகித வெற்றி தான்.

6.கூட்டுத் தொழில் துவங்க இருப்போர் தங்கள் பிசினஸ் பார்ட்னரை தெரிவு செய்வதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்துவது மிகவும் முக்கியம். பார்ட்னர்களால் ஏமாற்றப்பட்ட பல கதைகள் நாம் அறிந்ததே.

மேலாண்மை குறைபாடுகள்

பல தொழில்கள் துவங்கிய சில நாட்களிலேயே முடங்கி போவதுற்கு முக்கிய காரணம்
மேலாண்மை குறைபாடுகளே. வர்த்தக உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை தொழில் அபிவிருத்தியின் முக்கிய தூண்களான பணம், கொள்முதல், விற்பனை, உற்பத்தி மற்றும் திறமையான ஊழியர்களை தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் செலுத்துவது மிகவும் சிறந்தது.

போதிய பணமின்மை

பிசினஸ் செய்ய நினைக்கும் சிலர் செய்யும் முக்கிய தவறு தான் செய்யப்போகும் வர்த்தகத்திற்கான தொகையை குறைத்து மதிப்பிடுவது. பிசினஸ் தொடங்குவதற்கு மட்டுமில்லாமல் அதில் நிலைத்து நிற்பதற்கான பணத்துடனும் தொழில் தொடங்க வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை நிலவரங்கள் கை கொடுக்குமா. விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை முன்னரே சரியாக கணக்கிட முடியாது.
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மக்களை சென்றடைய சிறிது காலம் பிடிக்கலாம்.

இடத்தெரிவு

எங்கு பிசினஸ் தொடங்க போகிறோம், என்ன பிசினஸ் செய்ய போகிறோம், நாம் தெரிவு செய்திருக்கும் இடம் நம்முடைய வர்த்தகத்திற்கு பொருத்தமான இடம் தானா என்பது போன்ற சில ஆராய்ச்சி வேலைகளை தொடங்கும் முன் கருத்தில் கொள்வது நல்லது.

அகலக்கால்

பிசினஸ் தொடங்கும் பலர் சிறு வெற்றிகளுக்குப் பின் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்துவதும் அதில் அனைத்தையும் இழந்து விடுவதும் காலங்காலமாக நடைபெறுகிறது. இருக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதை தீவிர யோசனைக்குப்பின் சிறிது சிறிதாக செய்ய வேண்டுமே தவிர ஒரேயடியாக அகலக்கால் வைத்தல் கூடாது.

இவை போன்ற சில காரணிகளையும் மனதில் கொண்டு தெளிவான திட்டமிடுதலுடனும் , பாசிடிவ் மனப்பான்மையுடனும் , நாம் பிறருக்கு முன் மாதிரியாக வர வேண்டும் என்று நினைத்து தீவிர செயலாற்றினால் வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான்.


- OKV

Tuesday, February 9, 2010

அன்னியம் (முதல் கவிதை)

முதல் முறை பேசிய போது
தோழியா என்றேன்
அழகிய தமிழில் இல்லை என்றாலும்
அடுத்த மொழியில்
அதற்கும் மேல் என்றாய்


ஆண்டுகள் பல கழித்து
அதே கேள்வியை நீ என்னிடம்.......


எப்படி சொல்வதென்று தெரியவில்லை எனக்கு
அன்னியமாக்கியது நீதான் என்று.

Saturday, January 23, 2010

துபாய் நேற்று இன்று நாளை







அரசின் ஆடம்பர செலவுகள் - தீர்வு எங்கே?

ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் - தீர்வு யார் கையில்??

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான சாலைகள், வேளாண் உற்பத்திக்குறைவு, நஷ்டப்படும் விவசாயிகள், கிராமாப்புற கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, தரமான உயர் கல்வி கூடங்கள், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு இவை எல்லாவற்றையும் ஓரந்தள்ளி விட்டு நம் நாட்டின் பல மாநிலங்களில் அரசுகள் தங்களால் முடிந்தவரை கோடிகளை ஆடம்பரமாய் அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ நம் நாட்டில் அரசியல் கட்சிகள் பணம் சுருட்டுவதிலும், ஆடம்பரமாய் செலவழிப்பதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை தவறாமல் நிரூபித்தும் வருகின்றன. இதற்கு காரணம் யார் அரசியல்வாதிகளா??
இன்று விலைவாசி பன்மடங்கு உயர்ந்து எந்த பொருள் வாங்கினாலும் தலை சுற்றுகிற அளவிற்கு போய் விட்டது. ஆனால் விலைவாசி உயர்விற்கேற்ற அளவிற்கு ஊதிய உயர்வு யாருக்கும் இல்லை. சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதையெல்லாம் தாங்க கூடிய அளவிற்கு ஊதியம் உள்ளது. மற்றவர்கள் பாடு சங்கடமாகவே உள்ளது.
மாநில மாவட்ட தலைநகர நெடுஞ்சாலைகள், முக்கிய அரசியல் வாதிகளின் குடியிருப்பு அருகில் உள்ள சாலைகளில் மட்டுமே அரசுகள் ஓரளவிற்கு அக்கறை காட்டுகின்றன. கிராம மற்றும் நகர்ப்புற சாலைகளில் மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு குண்டும் குழியுமான சாலைகளும், ஒரு தடவை வாகனம் சென்று வந்தாலே அதை பணிமனைகளில் சென்று விட வேண்டும் என்ற நிலையில் உள்ள சாலைகளும் ஏராளம். வேறு வழியின்றி மக்கள் இதிலும் பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நம் நாட்டில் 25 % விளைநிலங்கள் பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்தில் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் அறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. உணவு பொருட்களை ஏற்றுமதி செய்த நாம் இருக்குமதி செய்யுமளவிற்கு வேளாண் துறை நசிந்துள்ளது. விவசாயிகள் சிலரை தேர்ந்தெடுத்து பாலைவனங்களை சோலைவனங்கலாக்கிய நாடுகளை பார்வையிட சொல்லும் அரசுகளுக்கு அந்த நாடுகள் இந்த நிலையை அடைய என்ன செய்தன, வேளாண்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதை அறிந்து செயல்படுவதில் அக்கறை இல்லை. மிகவும் சுகாதாரமான சில நாடுகளை சென்று பார்த்துவிட்டு இங்கேயும் அதை செயல்படுத்தப் போகிறோம் என அறிவிக்கும் முன் சில அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குப்பையை கீழே போடாதே, எச்சில் துப்பாதே என அறிவிக்கும் முன் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டோமா அதை முறையாக பராமரிப்பது எப்படி என்பதை எல்லாம் சிந்தித்து செயலாற்றிவிட்டு அறிவிக்க வேண்டும். இங்கு வெறும் அறிக்கையில் மட்டுமே அரசியல் நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய கேலிக்குரிய விஷயம்.
கிராமபுறங்களில் உள்ள கல்வி கூடங்களின் நிலையை ஆய்வு செய்து நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி அங்கும் கிடைக்க வழிவகை செய்தாக வேண்டும். பல கிராமங்களில் பெயரளவில் மட்டுமே கல்வி கூடங்கள் இயங்குகின்றன. அலுவலக பணியில் தொடங்கி அனைத்து அரசு பணிகளிலும் நியமனத்தில் 80 % லஞ்சம் மூலமே நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. தகுதி திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
கல்வி கொள்ளை லாபம் சம்பாதிக்க பயன்படும் தொழிலாக பார்க்கப்படுவதால் உயர் கல்விக்கான தரமான கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறை காரணமாக ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். முடிந்தவரை இந்த எண்ணிக்கையை குறைக்கலாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கிராமங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முதல் பல அரசின் திட்டங்களும் 75 % அறிக்கைகளில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை போன்ற பொதுவாக மக்களுக்கு நலனளிக்கும் விஷயங்கள் ஏராளம் செய்யப்படாமல் உள்ளன.
இப்படி கவனம் செலுத்த வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும் அதை எல்லாம் விட்டு விட்டு கோடிக்கணக்கில் செலவழித்து தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்கள் பணத்தை அள்ளி வீசுவதும், பல கோடிகள் செலவழித்து மாநாடு நடத்துவதும் ஏன்? தமிழ் மக்களின் மீது அக்கறை இல்லாமல் மொழியை எப்படி வளர்க்க முடியும். அந்தந்த மொழி பேசும் மக்கள் நன்றாக இருந்தாலே மொழியும் வளரும். மொழியை மற்றும் காப்பாற்றி என்ன செய்ய போகிறோம்?. இவ்வித மாநாடுகளால் சாமானிய மனிதனுக்கு என்ன பயன்?. தமிழ் மாநாடுகள் நடத்துவதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இல்லை. குறைந்த செலவில் அறிஞர்களை வைத்து நடத்த வேண்டும் என்பது தான் ஓட்டு மொத்த சாமானிய தமிழனின் விருப்பமும் கூட.
இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய மக்கள் வேறுவழியில்லாமல் பணத்திற்காக வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதெல்லாம் தடுக்க இளைய தலைமுறை முயல வேண்டும். மக்கள் சக்தி மகத்தானது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்காத வரை அரசியலில் ஆடம்பரம், அவரவர் சுயநலத்திற்காக தனி மாநில கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் மக்கள் கையில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளது. சிந்திக்குமா இளைய தலைமுறை??

- OKV

Tuesday, March 24, 2009

தமிழ்நாட்டில் விவசாயம் Tamil Nattil Vivasayam

அலங்கார அறிவிப்புக்களும் விவசாயிகளின் பரிதாப நிலையும்

மண்ணின் வளமே மக்கள் வளம், விவசாயமே எங்கள் பிரதான தொழில், உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் இன்று அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உணவை உண்கிறோம். இதே நிலைமை நீடிக்குமானால் நம் எதிர்காலச் சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இறக்குமதி செய்து பதப்படுத்தப்பட்ட உணவுகளையே பல மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவர். இப்பொழுதே அதற்கான அஸ்திவாரத்தையும் போட்டாயிற்று.

இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் அவரவர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் ஆயுதம் விவசாயம் என்றாகி விட்டது. ஆனால் எந்த அரசும் உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாக தெரியவில்லை. அரசின் அவசியமில்லாத இந்த அறிவிப்புக்கள் விவசாயிகளுக்கு உண்மையில் எந்த பயனையும் அளிக்கப் போவதில்லை. வெளிப்படையான மக்கள் பார்வைக்கு ஏதோ அரசு விவசாயிகள் நன்மைக்காக பல அறிவிப்புக்களை செய்வதாக காட்டிக் கொள்ளும் படம் தான் இது.

எவ்வளவோ கோடி கடன்களை பல தொழிலதிபர்கள் திரும்பி செலுத்தாமலிருந்தும் அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத அரசாங்கமும் வங்கிகளும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமென்ன?. இதில் கேலிக்குரிய விஷயம் அரசு விவசாயத்திற்காக கோடிக்கணக்கில் கடன் வழங்குவதாக அறிவிக்கிறது . எந்த அளவிற்கு அது விவசாயிகளை சென்றடைந்துள்ளது அல்லது பயனளித்துள்ளது? அதை வாங்குவதில் விவசாயிக்கு உள்ள சிரமங்கள் என்ன என்பதை யாரும் எண்ணிப் பார்த்ததாக தெரியவில்லை. அரசு அறிவிக்கும் திட்டங்களில் 10 சதவிகிதம் கூட உண்மையில் விவசாயிகளை சென்றடைவதில்லை. வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி செலுத்தும் அளவிற்கு வருமானம் இருக்குமானால் எந்த விவசாயியும் வரி செலுத்துவதை பற்றியோ வட்டி செலுத்துவதை பற்றியோ யோசிக்க கூட போவதில்லை.

விவசாயத்தை பொருத்தவரை சில விஷயங்களை எண்ணிப் பார்த்தாக வேண்டும். விவசாயம் என்பது இயற்க்கை சார்ந்த தொழில். இயற்கையை வெல்லும் அதிசய சக்தி யாருக்கும் இல்லை. மேலும் விவசாயிகளை முழுவதுமாக இடம் பெயரச் செய்து வேறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியாது. மனிதனின் மிக முக்கிய தேவை உணவு தான். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியது சாதி, மத, இன பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையும் கூட.

இனியாவது வரிகுறைப்பு, வட்டிகுறைப்பு போன்ற கவர்ச்சியான அறிக்கைகள் அரசியல் சுய லாபங்களுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயம் பற்றி பேசுவதையும் நிறுத்தி விட்டு விவசாயிகள் நலன்களுக்காக பாடுபட எந்த அரசாவது முன் வருமா? மிகச் சிறிய நாடுகள் மற்றும் பாலைவனமாக இருந்த நாடுகள் கூட தன்னிறைவை எட்டி விட்டன. ஆனால் இங்கு எல்லாமே வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. விவசாயிகளிடத்தில் ஒற்றுமை இருப்பின் அனைத்தும் சாத்தியமே. சிந்திப்போம். செயல்படுவோம்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ற பாடல் வரிகளை உண்மையாக்க பாடுபடுவோம்.

- OKV